Type Here to Get Search Results !

Adhipan Panchangam

ரிஷப ராசி பலன் - 2016




மெதுவான செய்கைகளைக் கொண்டும்,மந்தமான குணங்களுடனும்,தேவிகா வழிபாடுகளில் ஈடு பட்டுடடனும் விளங்குவார்கள்.வேடிக்கையாகப் பேசும் குணமும் கூட இவர்களிடம் காணப்படும்.சிலருக்கு புளிப்பு,காரம் இவைகளில் பிரியம் அதிகம் இருக்கும்.இவர்களிடம் பெரும் பாலும் காணப்படும் ஒரு கெட்ட குணம் என்ன வென்றால் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச் செய்யாமல்,பிறரைச் செய்யும் படி சொல்லுவார்கள் அதன் பலன்களைத் தாங்கள் பெறுவார்கள்.கிரக பலம் நன்றாக அமைந்தால் செல்வம்,செல்வாக்குடன் 80 வயது வரை இருப்பார்கள்.

2016 ஆம் ஆண்டிற்கான ரிஷப ராசியின் பலாபலன்கள்

அன்பான ரிஷப ராசி அன்பர்களே, இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் சனியால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருக்கும். அலைச்சல் அதிகம் இருக்கும். கெட்டவர் சேர்க்கை ஏற்படும். உறவுகளுடன் மனக்கசப்பு வந்து போகும். பெற்றோர்கள் கூட எதிராக செயல் படுவார்கள். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும். அதன்படி மேற்சொன்ன கெடு பலன்கள் கண்டிப்பாக உங்களுக்குக் குறையும். மேலும், முக்கிய முடிவுகளை இக்காலத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மற்றபடி 8.1.2016 ஆம் நாள் ராகு/ கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்துக்கு 5 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சி ஆவதால். சோதனைகள் குறையும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு சிலருக்கு அனுகூலம் ஆகும். கல்வியில் இருந்த தடை விலகும். ஆனால் சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் எப்போதும் பட படப்புடன் இருப்பீர்கள். அதுபோல கேது இதுவரையில் 11 ஆம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்தவர். இப்போது 10 ஆம் இடத்துக்கு மாறி இந்த ஆண்டு முழுவதும் 10 ஆம் இடத்தில் தான் இருக்கப் போகிறார். இதனால் வியாபாரத்தில் தேக்க நிலை உருவாகலாம் கவனம். பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் கூட இந்த ஆண்டு மட்டும் பல்லை கடித்துக் கொண்டு எப்படியாவது காலத்தை ஒட்டி விடுங்கள். இந்த ஆண்டு மட்டும் நீங்கள் வேலையை விட்டால், வேறு வேலை நிச்சயம் கிடைக்காது. அதனால் கவனம். நீங்கள் வேலையை விட்டுச் சென்று விடலாமா? என்ற அளவிற்கு சூழ்நிலை உருவாகும். ஆனால் தவறான முடிவுகள் ஏதும் எடுத்து விடாதீர்கள். இந்த நிலையம் கடந்து போகும் என்ற மன தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் கடந்து போகும், காரணம் குரு பகவான் இந்த ஆண்டின் பெரும் பகுதி உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். இது உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி முடிவியில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகம் ஆகும். சிலர் இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடந்தேறி அதனால் சுபச் செலவுகள் கையைக் கடிக்கும். இந்த வருடம் குறிப்பாக திருமணம் ஆன சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. இதனால் ஒரு பக்கம் குடும்பம், மறு பக்கம் வேலை என்று சாப்பிட நேரம் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். குருபகவானின் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. குரு உங்கள் ராசிக்கு 9,11,1 ஆம் இடங்களைப் பார்ப்பதால் இந்த வருடத்தின் பிற்பகுதியில் தந்தை வழிச் சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கும். தந்தை வழியில் அனுகூலமும் உண்டு. தேக ஆரோக்கியம் சீரடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு

வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புக்கள் கூடும். வருடத்தின் கடைசி ஆறு மாதங்களுக்கு பல நல்ல பலன்கள் உண்டு. ஆனால் இந்த வருடத்தின் முற்பகுதி (முதல் ஆறு மாதங்கள்) அதிக சோதனைகளைத் தரும். மற்றபடி சம்பள உயர்வு உண்டு. உடன் வேலை பார்ப்பவர்கள் சாதகமாக இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. அவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூகத்தில் உங்களது அந்தஸ்த்து உயரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மேற்கண்ட நன்மைகளை அடைவீர்கள். முற்பகுதி கொஞ்சம் சோதனையுடன் தான் இருக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியைக் காணலாம். லாபம் அதிகரிக்கும். வருடத்தின் பிற்பகுதியில் புதிய தொழிலை தொடங்கலாம். அதுவே ஏற்ற காலம். வருடத்தின் முற்பகுதி கொஞ்சம் சோதனையுடன் தான் காணப்படும். ஆனால் அரசாங்க உதவிகள் சாதகம் ஆகும். எதிரிகள், போட்டியாளர்களின் தொல்லை குறையும்.

மாணவர்களுக்கு

முற்பகுதி கொஞ்சம் சோதனை நிறைந்து இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். மொத்தத்தில் இந்தக் கல்வி ஆண்டு உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். ஆசிரியர்களின் அன்பைப் பெறுவீர்கள். விரும்பிய பாடத்தில் சேர இடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். உங்களுக்கு அரசு உதவிகளும், கடன்களும் கூட தக்க சமயத்தில் கிடைக்கும். செய்யும் தொழிலில் நம்பிக்கை பிறக்கும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு வருடத்தின் பிற்பகுதியில் ஒரு பிடிப்பு உருவாகும். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்வார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கூட ஏற்படும். சிலருக்கு உஷ்ண சம்மந்தமான நோய்கள் மட்டும் வருடத்தின் முற்பகுதியில் வந்து விலகும். மொத்தத்தில் மனத் தளர்ச்சி மறையும் ஒரு ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.

பரிகாரம்

பாம்பு புற்றுள்ள கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். இது தவிர விநாயகரை இந்த ஆண்டு முழுவதும் பூஜித்து வருதல் நல்லது. மற்றபடி, மகான்களின் வழிபாடு வெற்றியைத் தரும்.


பொது

பெயரின் முதல் எழுத்துக்கள் I, U, E, O, Wa, Wee, oo, We, Wo

அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் வைரம்

ராசியான எண்கள் அல்லது தேதிகள் 8,17,26

வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ மன் நாராயணர்

ராசியான நிறம்        நீலம்

ராசியான திக்கு        மேற்கு

ஆகாத நிறம் மஞ்சள்,கருப்பு


பின் குறிப்பு


இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.