Type Here to Get Search Results !

AdhibAn Panchangam

Tharpothu Vorai

Click to see all கிரக ஓரை

வேல் ஒரு ஆயுதம் அல்ல அறிவு: திருப்புகழ் மதிவண்ணன்



''வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவை குறிப்பது'' என ஆன்மிக பேச்சாளர் திருப்புகழ் மதிவண்ணன் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழ் மொழியின் சிறப்பு வேல். இலக்கணப்படி பார்க்கையில் முதல்நிலை நீண்ட தொழிற்பெயர். வேலுக்கு பூஜை செய்வது குறித்து சிலப்பதிகாரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு சாட்சியே தமிழ் பாடல்கள் தான். முதல் கடவுள் வணக்கமே திருமுருகாற்றுப்படை தான். பிறகு கந்தபுராணம் திருப்புகழ் கந்தசஷ்டி கவசம் என நீள்கிறது.

முருகப்பெருமானுக்கு எல்லாமே ஆறு தான். கந்தபுராணம் ஆறு பகுதி வளர்த்த கார்த்திகை பெண்கள் ஆறு முருகனின் முகங்கள் ஆறு. அருணகிரிநாதர் நாவில் முருகன் வேல் கொண்டு எழுதினார். அதன்பின் அவர் எழுதிய பாடல் தமிழ் இலக்கியத்திற்கு பெரும் புகழை சேர்க்கிறது. இப்படி ஒரு பாடலை எந்த மொழியிலும் பார்க்க முடியாது. அந்த பாடலில் அருணகிரிநாதர் வலதுபுறம் இடதுபுறம் முன்னும் பின்னும் காக்க வேண்டும் என பாடியிருக்கிறார். அதுதான் கந்தசஷ்டி கவசத்தின் தோற்றுவாய். அதில் மொத்தமாக சொன்னதை பாலன் தேவராயர் ஒவ்வொரு அங்கமாக பிரித்து 'காக்க வேண்டும்' என கூறியுள்ளார். வேல் என்றால் அறிவுவேல் என்பதும் அறிவு என்பதும் ஒன்றுதான். வேலின் அமைப்பை பாருங்கள்...

முதலில் கூர்மையாக பின்னர் அகன்று அதன் பின் ஆழமாக இருக்கிறது. அதாவது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் என்பதை வேலின் முனை காட்டுகிறது. அறிவு அகன்று இருக்க வேண்டும் என்பது வேலின் நடுப்பகுதி கூறுகிறது. அறிவு ஆழமாக இருக்க வேண்டும் என்பதை வேலின் அடிப்பகுதி உரைக்கிறது. இதற்கு சீவக சிந்தாமணியே சாட்சி. அதில் ஒரு பெண் மயக்கமுற்று விழுந்து விடுகிறாள். பின் மயக்கம் தெளிந்து எழும் போது அவள் 'வேல்பெற்று எழுந்தாள்' என்கிறார் ஆசிரியர் திருத்தக்க தேவர். அதாவது அறிவு பெற்று எழுந்தாள் என்கிறார்.

ஆயுதங்களிலேயே மனிதன் பெயர் வைக்க கூடிய ஒரே ஆயுதம் வேல் தான். அரிவாள் கத்தி சூலாயுதம் என்பதெல்லாம் பெயர்களில் இருக்காது. வெற்றி வேல் வைர வேல் வஜ்ரவேல் என வேல் பெயர் தாங்கிய மனிதர்கள் ஏராளம்.எனவே வேல் என்பது ஆயுதமல்ல... அறிவு. எனவே அனைவரும் அறிவு பெற்று விளங்க வேல் வணக்கம் செய்வோம்.இவ்வாறு கூறினார்.